Tuesday 27 December 2016

" ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி " -- தமிழ்த் தேசிய பேரியக்கம்.

ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி  

பெண்கள் தாங்களே முன்வந்து தங்கள் தாலிகளை அகற்றும் நிகழ்வொன்றை அண்ணல் அம்பேத்கர் 125ஆம் ஆண்டுப் பிறந்த நாளில் 14.04.2015 அன்று சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு இந்துக்களின் புனிதச் சின்னத்தை - புனிதச் சடங்கை இழிவுபடுத்துகிறது என்றும் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்து மதத்தின் பெயரில் இயங்கக் கூடிய சில அமைப்பினர் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் மனுச் செய்துள்ளனர். வேப்பேரி உதவிக் காவல் ஆணையர் 12.04.2015 அன்று தாலி அகற்றும் நிகழ்வுக்குத் தடை விதித்துள்ளார்.
காவல்துறையின் தடையை அகற்றக்கோரி திராவிடர் கழகத் துணைத் தலைவர் திரு. கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்கள் வழக்கை 13.04.2015 மாலை 4 மணி முதல் 7 மணி வரை விசாரித்து, தாலி அகற்றும் நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடந்த அனுமதி வழங்கியுள்ளார். திராவிடர் கழகத்தினர்க்குக் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

நீதிபதி து. அரிபரந்தாமன் இத்தீர்ப்பை எழுத்து வடிவில் வழங்கும் போது, இரவு 9 மணி. அடுத்த சில நிமிடங்களில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திரு. சோமையாஜி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சத்தீசுகுமார் அக்னிகோத்ரி முன்சென்று நீதிபதி து. அரிபரந்தாமன் கொடுத்த தீர்ப்பை நீக்கிடக்கோரி மேல்முறையீடு செய்ய அனுமதி கோரினார். மறுநாள் (14.04.2015) காலை 7 மணிக்கு மேல்முறையீட்டை எடுத்துக் கொள்வதாகவும், விசாரணை தமது வீட்டில் நடக்கும் என்றும் நீதிபதி அக்னிகோத்ரி கூறினார்.
மறுநாள் காலை 6.30 மணிக்கு உயர் நீதிமன்றப் பதிவு அலுவலகத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. காலை 7.45 மணிக்கு நீதிபதி சத்தீசு அக்னிகோத்ரி, நீதிபதி எம். வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணையைத் தொடங்கியது. காலை 9 மணிக்கெல்லாம் தனிநீதிபதி அளித்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்தது இரு நீதிபதி அமர்வு.
இதற்குள் அன்று (14.04.2015) காலை 7 மணிக்கெல்லாம் சென்னைப் பெரியார் திடலில் கணவன் - மனைவி விருப்ப அடிப்படையில் தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டனர், திராவிடர் கழகத்தினர். இருபத்தோரு பெண்கள் தாலி அகற்றினர்.

நீதிமன்றத் தடை வந்தபின் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மாட்டுக்கறி விருந்துண்ணும் நிகழ்ச்சியைத் தள்ளி வைத்து, உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று நடத்துவோம் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி.

உடனே பாரத் இந்து முன்னணி, சிவசேனை என்ற பெயர்களில் இயங்கும் பிரிவினர், திராவிடர் கழகத்தினர் இந்து மதத்தை இழிவுபடுத்திவிட்டனர், தாலியின் புனிதத்தை அவமதித்துவிட்டனர் என்று முழங்கிக் கொண்டு வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் பாரத் இந்து முன்னணியினர் சாலை மறியல் செய்து கைதாகினர். குமணன்சாவடியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியினர் அரசுப் பேருந்துகளின் மீது கல்வீசிக் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
14.04.2015 மாலை 3.30 மணியளவில் பெரியார் திடல் வாசலில் தானியில் வந்த சிவசேனையைச் சேர்ந்த நான்கு பேர் “ஜெய் காளி, ஓம் காளி” என்று வடமொழியில் கூச்சல் போட்டுள்ளனர். திராவிடர் கழகத்தினர்க்கும் சிவசேனைக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் தடியடி நடத்தி இருதரப்பினரையும் விரட்டியுள்ளனர். இருதரப்பினரும் காயம்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். சிவசேனையினர் வந்த தானியில் (ஆட்டோவில்) இருந்த, தரையில் வீசினால் வெடிக்கக்கூடிய பட்டாசு ரக வெடிகுண்டுகள், கடப்பாரை, சுத்தியல் போன்றவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

“இந்து” என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய இந்த சிறு கும்பல்களின் பின்னணியில் பாரதிய சனதாக் கட்சி இருக்கிறது என்பது, 14.04.2015 அன்றே அம்பலமானது. பா.ச.க.வின் இந்தியச் செயலாளர்களில் ஒருவரான எச். இராஜா தாலி அகற்றல் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். “திருட்டுத்தனமாகத் தாலி அகற்றும் போராட்டம் நடந்துள்ளது” என்று எச். இராஜா தம் வழக்கப்படி தடித்தனமாகப் பேசியுள்ளார். இந்து முன்னணி இராம கோபாலன் “வீரமில்லாத வீரமணி” நான்கு சுவர்களுக்குள் தாலி அகற்றும் போராட்டம் நடத்தியுள்ளார் என்று சாடியுள்ளார்.

தாலிகளை அகற்றிய 21 குடும்பத்தினரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வேறு மதத்திற்குப் போகவில்லை. தங்கள் முன்னோர்கள் கடைபிடித்த பழக்க வழக்கங்களில், ஆண் - பெண் சமத்துவத்திற்கு முரணாக உள்ள சில ஒப்பனைகளை அவர்கள் தாங்களாகவே முன்வந்து நீக்கிக் கொள்கிறார்கள். இதில் தலையிட, இதனைத் தடுக்க எச். இராஜாவுக்கோ, இராம கோபாலனுக்கோ வேறு சில விடலைகளுக்கோ இந்துமதம் உரிமை வழங்கியுள்ளதா? இல்லை.

இந்து மதத்தில் எச். இராஜா, இராம கோபாலன் போன்றவர்கள் யார்? அவர்களுக்கு என்ன இடம் வழங்கப் பட்டிருக்கிறது? இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் உண்டு. சைவம், வைணவம் போன்ற பல பிரிவுகள் உண்டு. இந்து மதத்திலிருந்து ஒருவரை நீக்கி வைக்க, தள்ளி வைக்க எந்த பீடத்திற்கும் அதிகாரம் கிடையாது.

இந்து மதத்தில் புரையோடிப் போயிருந்த எத்தனையோ தீய நம்பிக்கைகளை - பழக்க வழக்கங்களை இந்து மதத்தில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் எதிர்த்து அவற்றுக்கெதிரான சட்டங்களை இயற்றும்படிச் செய்துள்ளார்கள்.
கணவன் இறந்தவுடன் மனைவியைக் கட்டாயப்படுத்தி, அவன் பிணம் எரியும் நெருப்பில் அவளைத் தள்ளிக் கொல்லும் உடன்கட்டை ஏறுதல், பருவமடையாத பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, அக்குழந்தையின் கணவன் இறந்துவிட்டால், ஆயுள்வரை அப்பெண் விதவையாக இருந்து அழிவது, கோயில்களில் நிலக்கிழார்கள், மைனர்கள் போன்றவர்களின் வரம்பற்ற பாலுறவுக்காக தேவதாசிகளாகப் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி விடுவது போன்ற எத்தனையோ பெண்ணடிமைத்தன நிகழ்வுகள் புனிதச் சடங்கு என்ற பெயரில் இந்து மதத்தில் இருந்தன. இந்து மதத்தைச் சேர்ந்த இராஜாராம் மோகன்ராய், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற எத்தனையோ பேர் முயன்று போராடி, இவற்றையெல்லாம் தடை செய்யும் சட்டங்கள் வரச் செய்தனர்.

வள்ளல் பெருமான், சிலை வணக்கத்தையே எதிர்த்து ஒளி வணக்கத்தைக் கொண்டுவந்தார். இராம கோபாலன், எச். இராஜா வகையறாக்களின் தலைச் செருக்கையும், தலைகால் புரியாத களியாட்டத்தையும் பார்த்தால், வள்ளலார், தெய்வச் சிலைகளை இழிவுபடுத்திவிட்டார், சிலை வணக்க இந்துக்கள் மனத்தைப் புண்படுத்திவிட்டார் என்று கூக்குரலிட்டு, வள்ளலாரின் சன்மார்க்க சங்கங்களைத் தடை செய்யக் கோருவார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
இந்துக்களில் ஆரியர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு இனத்தினர் இருக்கிறார்கள். பா.ச.க., இந்து முன்னணி, சிவசேனை போன்றவை முன்வைக்கும் இந்து மதம் ஆரிய இந்துத்துவா! அது தமிழ்ச் சைவ சித்தாந்தமோ, தமிழ்த் தென்கலை வைணவமோ அல்ல!
அண்ணா தி.மு.க.வும் செயலலிதாவும், எந்த இந்துப் பிரிவை ஆதரிக்கின்றனர் என்பதுதான் தமிழர்கள் முன் உள்ள வினா! ஆரிய இந்துப் பிரிவையா? தமிழர்களின் சைவ சிந்தாந்தம் மற்றும் தென்கலை வைணவக் கொள்கைகளைக் கொண்ட இந்துப் பிரிவையா?
செயலலிதா கட்சி, ஆரிய இந்துப் பிரிவை ஆதரிக்கிறது என்பதுபோல்தான் அதன் செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.

நான்கு சுவர்களுக்குள் - தங்கள் சொந்த இடத்தில் திராவிடர் கழகத்தினர் தாலி அகற்றும் நிகழ்வை நடத்துவதற்குக் காவல்துறையினர் ஏன் தடை விதிக்க வேண்டும்? அத்தடையை நீக்கித் தனி நீதிபதி கொடுத்த ஆணையின் மீது தடை வாங்க இரவு 9 மணிக்குத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, மூத்த நீதிபதி கதவைத் தட்டி, கோரிக்கை வைத்து மறுநாள் 6.30 மணிக்கு வழக்கைப் பதிவு செய்து, 7.30 மணிக்கெல்லாம் நீதிபதி அக்னி கோத்ரி வீட்டில் இருநீதிபதி அமர்வை நடக்கச் செய்து தடை வாங்கியிருக்கிறார். மற்ற பொது நல வேலைகளில் செயலலிதா ஆட்சி இவ்வாறு முனைப்பாக நடந்து கொண்டதுண்டா? இல்லை.

நீதிபதி அக்னிகோத்ரி அமர்வும், அமைதியாக நடக்கும் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு இந்திய அரசமைப்புச் சட்டப்படி அனுமதி உண்டு என்பது இந்தியக் கலாச்சாரம் தொடர்பான விடயங்களில் பொருந்துமா என்று கேட்டு, வழக்கை ஒத்தி வைத்துள்ளார். இந்தியக் கலாச்சாரம் என்பதில்தான் ஆரிய ஆதிக்கம் ஒளிந்துள்ளது.

ஆரியப் பார்ப்பனியத் தலைமையிலான இந்து மதப்பிரிவைத்தான் செயலலிதா ஆதரிக்கிறார்; தமிழர்களின் இந்து மதத்தை அவர் ஆதரிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. தமிழக அரசின் இந்த பாகுபாட்டு அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
தில்லியிலும் ஆரியப் பார்ப்பனிய ஆட்சி; தமிழ்நாட்டிலும் ஆரியப் பார்ப்பனியத்திற்கு ஆதரவான ஆட்சி என்ற துணிச்சலில்தான் பார்ப்பனிய இந்துத்துவா புள்ளிகள் தலைகால் தெரியாமல் வெறிப்பேச்சு பேசுகின்றனர். வெடிகுண்டுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தில் வீசிச் சென்றனர். இப்போது, தி.க. அலுவலகத்திற்கே வெடிகுண்டுடன் வந்துள்ளனர். வெடிகுண்டு, கடப்பாரை, சுத்தியல் சகிதம் வந்த அந்த வன்முறைக் கும்பலை பெரியார் திடல் வாசல்வரை வர விட்டு, வடநாட்டு மொழியில் கூச்சல்போட காவல்துறை அனுமதித்துள்ளது. தமிழகக் காவல்துறைக்கு இவ்வாறு தவறான வழிகாட்டியது யார்?

தாலி என்பது கடந்த காலத்தில், ஏன் சங்க காலத்தில்கூடத் தமிழர்கள் திருமணத்தில் இடம் பெற்றுள்ளது. அப்பொழுது, இந்து மதம் கிடையாது. ஆனால், இன்று பெண்ணுக்குத் தாலி போடுவது ஆணாதிக்கத்தின் அடையாளம் தவிர, வேறல்ல. எனவே, தமிழ்ப் பெண்கள் தாலி போட்டுக் கொள்ள தாங்களே முன்வந்து மறுப்புத் தெரிவிக்க வேண்டும்.

அடுத்து, ஒருவர் தன் உடம்பில் என்ன அணிகலனை அணிந்து கொள்வது அல்லது அணிந்து கொள்ளாமல் தவிர்ப்பது என்று முடிவு செய்ய அந்தத் தனிநபருக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறான உரிமையைக் காலம்காலமாக இந்துமதம் அனுமதிக்கிறது. கடவுள் மறுப்பு கூட இந்துமதக் கோட்பாட்டில் ஒரு பகுதிதான். தங்களின் பழைய சமூக ஆதிக்கத்தை மீண்டும் புதுப்பிக்கத் துடிக்கும் பார்ப்பனியப் புள்ளிகளின் சதிவலையில் தமிழர்களாய் உள்ள இந்துக்கள் வீழ்ந்துவிடக் கூடாது. தாலி வேண்டாம் என்று பரப்புரை செய்ய - தாங்களே முன்வந்து தாலியை அகற்ற நூற்றுக்கு நூறு உரிமை இருக்கிறது. அதே வேளை வலுக்கட்டாயமாகத் தாலியை அகற்றவோ, தாலி கட்டுவதைத் தடுக்கவோ யாருக்கும் உரிமையில்லை.

இந்தப் புரிதலோடு - தமிழ் மக்கள் செயல்பட வேண்டும். மத உணர்வைக்காட்டி, ஆதிக்க சதிவலையில் வீழ்த்த முயலும் ஆரிய - பார்ப்பனியக் கேடர்களுக்குத் தமிழ் மக்கள் இடம் கொடுக்கக் கூடாது.

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 ஏப்ரல் 16 இதழில் வெளியானது.)

Monday 7 November 2016

தமிழர் ஒத்துழையாமை இயக்கம்

எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை ; இனி புதியப் போராட்டம் நடத்துவோம்.

காந்தியடிகள் வெள்ளை ஏகாதியப்படுத்தியத்தை , எதிர்த்து 1920--ல் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் போல், தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய அரசை எதிர்த்து "தமிழர் ஒத்துழையாமை இயக்கம்" நடத்துவோம். நம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம்!!!!

தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தின் வேலைத் திட்டங்கள் :

1. இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும் .

2. தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்.

3. இந்திய அரசு அளிக்கும் சிறப்பு விருதுகளை தமிழ்நாட்டு சான்றோர்கள் , எழுத்தாளர்கள், கலைஞர்கள், வீரர்கள், வாங்க கூடாது. நல்லாசிரியர் விருதுகளை தமிழ்நாட்டு ஆசிரியர்கள் வாங்க கூடாது.

4. நடுவண் அமைச்சர்கள் தமிழ்நாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். நடுவண் அமைச்சர்களுக்கு கருப்பு கொடி காட்ட வேண்டும்.

5.  இந்திய அரசு வங்கிகளில் தமிழ்நாட்டு உழவர்கள் வாங்கியுள்ள வேளாண் கடன்களை திருப்பி செலுத்த வேண்டாம்.

6.  காவிரி படுகையிலிருந்து பெட்ரோலியம் , எரிவளி ,  மீத்தேன், நிலக்கரி உள்ளிட்ட எந்த கனிமத்தையும் கனிமத்தையும் இந்திய அரசு எடுக்க அனுமதிக்க கூடாது.

7.  தமிழ்நாடு அரசு கர்நாடகத்திற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

8. கர்நாடகத்தில் உற்பத்தியாகும் அரிசி, மஞ்சள், புகையிலை, உள்ளிட்ட எந்த பொருளையும் தமிழ்நாட்டு சந்தையில் அனுமதிக்க கூடாது.

இப்பொருட்களை தமிழ்நாட்டு வணிகர்களும், தமிழ் மக்களும் புறக்கணிக்க வேண்டும்.

9. நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை அங்கு பணிபுரிவோரும் , தமிழ் மக்களும் நிறுத்த வேண்டும்.

10.  தமிழ்நாட்டில் கன்னட திரைப்படங்கள் ஓட அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டு திரைப்பட துறையினர் கர்நாடக திரைப்பட துறையினருடன் எந்தவகை தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.

"தமிழர் ஒத்துழையாமை இயக்கத்திற்கு" ஆதரவு தாரீர்.

----தமிழ்த் தேசியப் பேரியக்கம்----

Tuesday 25 October 2016

உத்தர்பிரதேஷில் வாரிசு அரசியல் :

முலாயம் சிங் கட்சி உறுப்பினராக சேர்ந்த பெண்ணை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்கிறார் முதல் மனைவி இறந்த பின்பே இரண்டாவது மனைவி பற்றி வேட்புமனு தாக்கலின் போது தெரிவிக்கிறார்.

மூத்த மகனை திருப்திப்படுத்த முதல்வர் பதவி , மருமகளுக்கு பாராளமன்ற உறுப்பினர் பதவி.

இரண்டாவது மனைவியை சமாளிக்க , இன்னொரு மருமகளுக்கு பாராளமன்ற உறுப்பினர் பதவி.

அப்பாவின் ஆதரவாளர்களை அமைச்சர் பதவியிலிருந்து மகன் நீக்குகிறார். , ஆதரவாளர்களை கட்சியை விட்டு தந்தை நீக்குகிறார்.

கட்சிக்காக பாடுபட்ட உறுப்பினர்கள் , வேதனையில் இப்படியாக "வாரிசு அரசியல்" உத்தரப்பிரதேஷத்தில்....

Saturday 22 October 2016

தூக்கை தூக்கில் ஏற்றுவோம்...

தூக்கை தூக்கில் ஏற்றுவோம்...


நியாயமான மரணதண்டனை என்ற ஒன்றில்லை. மரண தண்டனையே தவறு தான்.

என்ன ஒன்று , சௌதி அரசர் தன் பேரன் என்பதற்காக சட்டத்தை மாற்றவில்லை. மக்களுக்கு என்னவோ , அதுவே தன் பேரனுக்கும் என்ற அவரின் நிலை நன்று.இதோடு நீங்கள் இந்தியாவை யோசித்துப் பாருங்கள்.

சல்மான் கான் மீது நியாயமான விசாரணை கூட நடைபெறவில்லை , தீவிரவாத செயலில் ஈடுபட்ட சஞ்சய் தத் சிறை தண்டனையை அனுபவிக்கவே இல்லை. ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லல்லு பிரசாத் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெளியே நிம்மதியாக.உள்ளனர்.

 சிறை காலம் முடிந்தும் பேரறிவாளன் , நளினி உள்ளிட்ட தோழர்கள் இன்னும் சிறைக்குள்ளே. எவ்வித ஆதாரமும் இல்லாமல் ராம்குமாரை கைது செய்து சிறைக்குள்ளே சாகடிக்கப்பட்ட வரலாறுகள் இந்தியாவின் நீதி வரலாறாக உள்ளது.

இப்படியான நாட்டில் தான் "சௌதி போல் சட்டம் கடுமையாக வேண்டும்" என்ற குரல்கள் ஒலிக்கின்றன. அப்படி ஒரு நிலை வந்தால் அப்பாவிகள் தான் மீண்டும் பலி கொடுக்கப்படுவார்கள்...!

விபத்தின்றி பயணிப்போம்....

விபத்தின்றி பயணிப்போம்....


"பத்து மீட்டர் இடைவெளி விட்டு வரவும்" முன்பு , எல்லா வாகனங்களின் பின்பும் இது எழுதியிருக்கும். இன்றும் கூட பேருந்துகளில் , சுமையுந்துகளில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் வாகன ஓட்டுபவர்களில் பலர் இதை பின்பற்றுவதில்லை.

நமக்கு முன் செல்லும் ஒருவர்  எதிர்பாராமல் கீழே விழுந்துவிட்டால் , அவர் மீது ஏறிவிடாமல் தடுக்க இது பயன்படும். ஒரு விபத்து தவிர்க்கப்படும். இன்றைய அவசர உலகில் இதை யாரும் பின்பற்றுவதில்லை.

இன்றைய காலகட்டத்தில் , நாம் சரியாக வாகனம் ஓட்டினாலும் , மற்றவர்களின் தவறால் விபத்து ஏற்படும் ஆபத்தும் அதிகமுள்ளது. அந்த வகையில் நாம் இன்னும் , அதிக சிரத்தை எடுத்து வாகனம் ஓட்ட வேண்டியுள்ளது.

வாகனங்கள் அதிகரித்துவிட்ட இச்ச்சூழலில் கிடைத்த சிறு வழியையும் உயிரை பணயம் வைத்து செல்லவே முயற்சிக்கிறோம். எங்கோ நடக்கும் விபத்து நம் அருகில் நடந்து விடக் கூடாது...

எச்சரிக்கை....

Thursday 29 September 2016

ஆர்.எஸ்.எஸும் அப்பாவிகளும்....

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானி , உமாபாரதி போன்றோர் அதை இரசித்துக்கொண்டும் , மகிழ்ச்சியில் இனிப்புகளை சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர்.

கரசேவகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மசூதியை இடிக்கும் பணியில் இருந்தனர்.

பொதுவாகவே பார்ப்பனர்கள் எந்த சண்டையிலும் முன்னுக்கு நிற்பதில்லை. அதே நேரத்தில் தாம் நினைத்ததை பிறரை தூண்டி நிறைவேற்றி விடுவார்கள். அப்படி நிறைவேற்றப்பட்டது தான் "பாபர் மசூதி இடிப்பு" , பின்பு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளும்.

அதன்படியே அத்வானி வேடிக்கை பார்க்க , இந்து மத வெறியேற்றப்பட்ட அப்பாவி பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் மசூதியை இடித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களை  தான் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிவது தான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தின் கொள்கை.

அன்றைய காலத்தில் அரசர்களுக்கு ஆலோசனை செல்பவர்களாக பார்ப்பனர்கள் இருந்தார்கள். அரசர்களை விட சிறப்பாகவே வாழ்ந்தார்கள். அவர்களுக்கு சேவகம் செய்யவே குறிப்பிட்ட மக்களை பயன்படுத்தினர். " சூத்திரர்கள் இழிதொழில் செய்யவும் , பார்ப்பனர்களுக்கும் , அரசனுக்கும் சேவகம் செய்யவே படைக்கப்பட்டவர்கள் " என்று வேதம் சொல்வதாக நம்ப வைக்கப்பட்டார்கள்.

அன்றைய காலம் போல் இப்போது மன்னராட்சி இல்லை, தீண்டாமை என்பது காலத்திற்கு காலம் மாற்றம் பெறுகிறது. அதன் நவீன வடிவமாக தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பார்க்க வேண்டும்.

பார்பனர்களுக்காக சண்டை போட , மசூதிகளை இடிக்க , மத சண்டைகளை உருவாக்க ஆள் தேவைப்படுகிறது. அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ் , இந்து முன்னணி போன்றவைகள். இவர்களுக்கான அரசியல் கட்சி பா.ச.க.

திருவிழாக்கள் நடத்துவது , கபடி போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்துவதன் மூலம் மக்களை திரட்டி பயிற்சி கொடுப்பது , இந்து மத பெருமைகள் , வேதகால பெருமைகள் பேசி மூளைச்சலவை செய்து வன்முறைக்கு தயார்ப்படுத்துவது தான் இவர்களின் வேலையாக உள்ளது.

அப்படிப்பட்ட வன்முறை தான் கோவையில் நடந்தது. வன்முறை மூலம் "இந்து மக்களின் பிரதிநிதி" என்ற பிம்பம் கிடைக்கிறது. அதை தேர்தலில் அறுவடை செய்ய நினைக்கிறார்கள்.

இதற்கு நாம் இடம் அளித்து விடக்கூடாது. இது திருவள்ளுவர் பிறந்த மண் , வள்ளலார் பிறந்த மண் , நம்முடைய வழிபாட்டு முறைகள் வேறு , நம்முடைய தமிழ் மொழியை இவர்கள் ஏற்கமாட்டார்கள்.

சமற்கிருத பார்ப்பன அடிமைகளாக நாம் இருக்க கூடாது. இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆரிய பிரச்சரத்தை தமிழ் கொண்டும் , தமிழர் வழிபாடு கொண்டும் எதிர்த்திடுவோம்....!

Tuesday 27 September 2016

தவறை ஒத்துக்கொள்ளும் போதே நீதிக்கான பயணம் ஆரம்பிக்கிறது....

அரசாங்கம் முதலில் தனது தவறை ஒத்துக்  கொள்ள வேண்டும். தங்களின் தவறை கௌரவ குறைச்சலாக நினைத்து , தவறை மூடி மறைக்க ஆரம்பிக்கும் போதே பிரச்சனைகள் அதிகமாகின்றன.

"டெங்கு காய்ச்சல் பரவுவவது உண்மை தான். இனி விழிப்போடிருந்து மக்களின் சுகாதாரத்தை காப்போம்" என்று அரசாங்கம் சொல்வதில் தவறேதுமில்லை.

உண்மையில் உண்மையை ஒத்துக்கொள்ளும் இப்படிப்பட்ட அரசாங்கம் தான் இங்கு தேவைப்படுகிறது. ஆனால் அரசாங்கமோ "மர்ம காய்ச்சல் பரவுகிறது" என்று பொத்தாம் பொதுவாக சொல்லி தமது தவறை மூடி மறைக்கிறது.

" டெங்கு காய்ச்சல் அதிகமுள்ள மாநிலம் என்ற அவப்பெயர் வந்து விடுமோ " என்ற போலி கெரளவத்திற்காக உண்மையை மறைக்கலாமா...?

தவறை ஒத்துக்கொள்ளும் போதே நீதிக்கான பயணம் ஆரம்பிக்கிறது....

தமிழ் மொழியில் அறிவியல் :

ஆங்கிலம் பிறக்காத காலத்திலேயே உலகம் வியக்கும் வகையில் - ஆற்றைத் தடுத்துக் கல்லணை கட்டியிருக்கிறோம்,

"ஆனால், ஆங்கிலத்தில் தான் எல்லாம் இருக்கிறது, நம் மொழியில் எதுவுமில்லை" என்று புரிந்து கொள்கிறார்கள்.

"ரசமட்டம்" என்று தமிழில் சொன்னால் அவர் கொத்தனார். ஆனால் "மெர்குரி லெவல்" என்று ஆங்கிலத்தில் சொன்னால் அவன் இன்ஜினியர்.

"வேப்பங்குச்சி"என்று சொன்னால் அவன் பட்டிக்காட்டான். ஆனால் "நீம் டூத் பேஸ்ட்" என்று சொன்னால் அவன் நாகரிகத்தவன்.

"இட்லி பானை" என்று சொன்னால் அவன் கிராமத்தான். ஆனால் "பிரசர் குக்கர்" என்று சொன்னால் அவன் நாகரிகத்தவன். இவ்வாறு நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

"ஆடிப்பட்டம் தேடி விதை "என்பது தமிழில் பழமொழி. ஆனால், அதிலொரு அறிவியல் உண்மை இருக்கிறது.

இதை ஏன் நாம் இழக்க வேண்டும்..? இந்த அறிவியலை இந்த உலக சமூகம் ஏன் இழக்க வேண்டும்...?
...........................................
தோழர் கி.வெங்கட்ராமன்,தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Friday 22 July 2016

காஷ்மீர் பிரச்சினையில் நம் பார்வை சரியா....?

காஷ்மீர் எங்க இருக்கு...?

ஈரோடு பக்கம் இல்ல தூத்துக்குடி பக்கம் இருப்பது போலவே சில நண்பர்கள் நினைத்துக் கொண்டு " காஷ்மீர் இந்தியாவின் அங்கம் " என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட இந்திய தேசபக்தியின் வெளிப்பாடு தானே தவிர உண்மை அல்ல.

1947--ல் இந்தியாவை உருவாக்கும் போது. பல தேசங்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்ற காரணத்திற்காக இந்தியாவோடு இணைந்தன. அரசு கட்டி ஆண்ட தமிழர்கள் கூட பிரிட்டிஷ் எதிர்ப்பின் காரணமாகவே இணைந்தனர். இந்தியாவோடு இணைவதற்கு தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள் இருந்தது.

நாகாலாந்து , மணிப்பூர் உட்பட பல தேசங்கள் துப்பாக்கிகளை காட்டி மிரட்டி இணைக்கப்பட்டன.

சில தேசங்கள் ஆசைவார்த்திக் காட்டி இணைக்கப்பட்டன. "ஐநா சபையிடம் பேசி தனி நாட்டிற்கான  பொதுவாக்கெடுப்பு நடத்துகிறோம் " என்ற ஆசைவார்த்தையால் இணைக்கப்பட்ட தேசம் தான் காஷ்மீர்.

இன்று வரை இந்தியா காஷ்மீர் மக்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. மாறாக அவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறது , அபகரிக்க துடிக்கிறது. பாகிஸ்தானும் மறுமுனையில் இதையே செய்கிறது.

இரு நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் அம்மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்வோம். அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்......!

Thursday 21 July 2016

கேரள கம்மயூனிஸ்ட்களின் தேசபக்தி...!

குளச்சல் துறைமுகம் விரிவாக்கப்பட்டால் பன்னாட்டு கப்பல்கள் , கொச்சித் துறைமுகம் செல்லாமல் குளச்சல் வழியாக தமிழர் பெருங்கடலில் பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.

இதனால் , விழிஞ்சம் போன்ற கேரளத் துறைமுகங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமென்று கேரள கம்யூனிஸ்ட் அரசு கருதுகிறது.

தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீரும் , பாசனநீரும் தரும் முலலைப் பெரியாறு அணையை ஒரு பக்கம் உடைக்க வேண்டுமென்று கொக்கரிக்கும் மலையாளிகள்,

மறுபுறம் தமிழர்கள் குளைச்சல் துறைமுகம் கட்டக் கூடாது என்கிறார்கள். என்னே மார்சிஸ்ட்களின் சோசலிசம் ! என்னே அவர்களின் இந்திய தேசியம் ! சர்வதேசியம !.

தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் , இனத் தற்காப்புணர்வும் , தற்காப்பு ஆற்றலும் பெற வேண்டும்.....! "
------"தமிழர் கண்ணோட்டம்" இதழில்.

Tuesday 19 July 2016

காஷ்மீர் தேசத்தின் சிறப்பு...

காஷ்மீர் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உண்டு. வெளி மாநிலத்தவர்கள் யாரும் அங்கு நிலம் வாங்க முடியாது என்ற 370--வது சட்டப்பிரிவு தான் அந்த பாதுகாப்பு.

மார்வாடிகள் , மலையாளிகள் பன்னாட்டு , வெளிநாட்டு முதலாளிகளால் அங்கு நிலம் வாங்க முடியாது. ஆதலால் காஷ்மீர் மக்களின் நிலம் கொள்ளையடிக்கப்படாமல் உள்ளது.

தமிழ்நாட்டில் இத்தகைய சிறப்பு சட்டப்பிரிவு இல்லையென்பதால் தான் , தமிழ்நாட்டு மக்களின் நிலம் , வேலைவாய்ப்பு பிற மாநில மக்களால் வேட்டையாடப்படுகிறது...

காஷ்மீர் தேசத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டிற்கும் 370--வது சட்டப்பிரிவு தேவை என்பதை உணர்வோம். தாயகம் காப்போம்.....!

Tuesday 12 July 2016

போராளிகளின் மரணமும்----சிங்களத்தின் நயவஞ்சகமும்.


போரின் இறுதி கட்டத்தில் பல போராளிகளை இலங்கை அரசாங்கம் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் ரகசிய இடத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டார்கள். அப்படி கைது செய்யப்பட்ட பலரின் நிலை இன்றும் தெரியவில்லை.

இலங்கை அரசுக்கு ஆதரவாக மாறியவர்கள் ஆள்காட்டியாக மாறி போராளிகளை காட்டிக் கொடுத்தார்கள்.

" போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கி புது வாழ்வு அளிக்கிறோம் " என்று இலங்கை அரசு நாடகத்தை அரங்கேற்றியது. அதன்படி சில போராளிகளை விடுதலை செய்தது. அப்படி விடுதலை ஆன தமிழினி அக்கா உள்ளிட்ட போராளிகள் , சிறுது நாட்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள்.

மனித உரிமை ஆர்வலர்களின் கண்காணிப்பால் , முன்பு போல் துப்பாக்கியால் கொல்ல முடியாத சிங்கள அரசு , நயவஞ்சகமாக போராளிகளின் உடலுக்குள் புற்றுநோயை உண்டாக்கும் கிருமியை செலுத்திக் கொல்கிறது.
தமிழர் மீதான இன அழிப்பு தொடர்கிறது.

ஆயுதம் ஏதும் இல்லாத போதும் , தமிழ்ப் போராளிகளை கண்டு சிங்களம் அச்சம் கொள்கிறது.

எப்போதும் போல் இப்போதும் எங்கள் போராளிகள் வீர்களாகவே சாகிறார்கள். நீ கோழையாகவே வாழ்கிறாய்.....!
 
http://senpakam.org/49284/

Sunday 10 July 2016

பீகாரின் கல்வித்தரமும்--பாதிப்படையும் தமிழர்களும்....

பீகாரில் நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலே முதல் மதிப்பெண் பெற்றார். மாநிலமே புகழ்ந்தது.

வழக்கம் போல செய்தியாளர்கள் பேட்டியெடுக்க சென்றனர். அப்போது தான் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கல்வித் தரத்தை கண்டு உலகமே சிரித்தது.

ஒரு செய்தியாளர் பொலிடிக்கல் சயின்ஸ் பாடத்தின் மதிப்பெண் குறித்து கேள்வியெழுப்பிய போது "பொலிடிக்கல் சயின்ஸ் என்றால் சமையற் கலை படிப்பு தானே" என்றார்.  மொத்தக் கூட்டமும் வாயடைத்து நின்றது.

பின்பு தான் தெரிந்தது. ஆள் மாறாட்டாம் செய்து தேர்வை எழுதியிருக்கிறார் என்று. விசாரணை நடத்தப்பட்டு இப்போது அந்த மாணவி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதே போன்று முறைகேட்டில் ஈடுபட்டதாக சிலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த முறைகேடு குறித்து அந்த மாணவி கூறியது இன்னும் அதிர்ச்சியை தந்தது.

"நான் தேர்ச்சி பெற்றால் போதும் என்று தான் அப்பாவிடம் கூறினேன். அவரோ என்னை முதலிடம் பிடிக்க செய்யுமளவுக்கு சென்று விட்டார்".

ஆக பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் கல்வித்தரத்தின் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்...?

லாலு பிரசாத் இந்திய அமைச்சராக இருந்த காலம் தொட்டு இன்று வரை ஆயிரக்கணக்கான பீகாரிகள் தமிழ்நாட்டில் தொடர்வண்டி உள்ளிட்ட துறைகளில் நுழைந்துள்ளனர்.

இவர்களின் தரம் கேள்விக்குட்படுத்தப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். வேலைவாய்பில்லாமல் இருக்கும் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டம்.

அவர்களின ஊரில் எது வேண்டுமானாலும் செய்யட்டும். அங்கையே வேலைவாய்ப்பை பெற்று வாழட்டும்.

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு பணிகளில் 90 சதவிகத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் இக்கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. தோழர்கள் துணை நிற்க வேண்டுகிறோம்....!

Thursday 16 June 2016

இந்திய அமைச்சருக்கு பதில் :

" இந்தியை புறக்கணித்து தமிழ் என்ன முன்னேற்றம் கண்டது...? "

----இந்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

நம் பதில் : இந்திக்கார்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் தேசமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. இந்தியாவிலே சிறந்த மாநிலமாகவும் தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

Sunday 10 April 2016

குடியுரிமையா...? மொழியுரிமையா....?

அமெரிக்காவில் கூட குடியுரிமை பெற்று இந்தியாவில் வாழ்வதை விட இனிமையாக வாழலாம்.

பிறகு தாய்நாட்டிற்கும் , குடிபுகுந்த நாட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன...?

தாய்நாட்டில் மட்டுமே நம் தாய்மொழி தேசிய மொழியாக இருக்கும். ஆனால் குடி புகுந்த நாட்டில் நம் தாய்மொழி தேசிய மொழியாக இருக்காது.

அவர்கள் திணிக்கும் மொழியையே நாம் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். குடியுரிமை பெற்று வாழலாம் அவ்வளவுதான்.

இந்தியாவில் குடியுரிமை பெற்று வாழ்கிறோமே தவிர , மொழியுரிமை பெற்று வாழ்கிறோமா....?

தமிழ் மொழி தேசிய மொழிகளில் ஒன்றாக இல்லை. இந்திய அரசு இந்தி , சமற்கிருதத்தை நம் மீது திணிக்கிறது.

பின் இந்தியா எப்படி நம் தாய்நாடாகும்....?

Monday 7 March 2016

அகதியிலும் இனப் பாகுபாடு

அகதிகளில் கூட இனப் பாகுபாடு உண்டு.

திபெத் , பங்களாதேஷ் அகதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் இல்லை.

இந்திய முகாமில் கைதிகளாக தான் ஈழத் தமிழர்கள் உள்ளனர். இன்று கூட உச்சப்பட்டி முகாமில் வருவாய் துறை அதிகாரியின் தொடர் தொந்தரவால் ஈழத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

பங்களாதேஷிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு உடனே குடியுரிமை கொடுக்கப்படுகிறது. பல வருடங்களாக இங்கையே பிறந்து வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.

ஆம் , அகதிகளில் கூட இனப் பாகுபாடு உண்டு இந்தியாவில்.....

Tuesday 1 March 2016

" ஏழு தமிழர் விடுதலை " புத்தக வெளியீட்டு விழா

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், 28.02.2016 அன்று மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

நூல் வெளியீட்டு நிகழ்வில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி, நூலை வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் முதற்படி பெற்றுக் கொண்டார்.

இயக்குநர் வெற்றிவெல் சந்திரசேகர், தொழில் முனைவோர் திரு. தாரை. மு. திருஞானசம்பந்தம், தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் திரு. நெடுமாறன், ஊடகவியலாளர் திரு. கார்ட்டூனிஸ்ட் பாலா, ஓவியர் கு. புகழேந்தி, தமிழர் ஆன்மிகச் செயற்பாட்டாளர் திருவாட்டி. கலையரசி, ‘லாக்கப்’ நாவலாசிரியர் திரு. சந்திரக்குமார் ஆகியோர் சிறப்புப்படி பெற்றனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்பு செய்தார்.

Sunday 28 February 2016

வாருங்கள் " ஏழு தமிழர் விடுதலை "--புத்தக வெளியீட்டு விழாவிற்கு

"ஏழு தமிழரை மீட்க அறிவாயுதம் ஏந்தி வருகிறோம்...

அதிகாரமற்ற தமிழாட்டரசின் அதிகாரத்தை காட்டுகிறோம்...

ஆரியம் கட்டிய நீதி தேவதையின் கண்களை தமிழ் அறம் கொண்டு திறப்போம்...

" ஏழு தமிழர் விடுதலை " புத்தக வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது. வந்திருந்த தோழர்களுக்கு நன்றி.

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...